அம்மன்/தாயார் : தையல்நாயகி
தல விருட்சம் : வேம்பு
தீர்த்தம் : சித்தாமிர்தம்
ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : புள்ளிருக்குவேளூர்
ஊர் : வைத்தீஸ்வரன் கோயில்
தேவார பாடல் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.
பிற பாடல் பாடியவர்கள்:
அருணகிரிநாதர் (14 திருப்புகழ் பாடல்கள்), குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர்,காளமேகப் புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் முதலனோர்..
தேவாரப்பதிகம்:
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தை தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே. - திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 16வது தலம்.
திருவிழா:
கந்தசஷ்டித் திருவிழா,
செவ்வாய்க்கிழமை தோறும் மாலையில் ஆட்டுக்கிடா வாகனத்தில் அங்காரகன் எழுந்தருளுவார்,
ஆடிப்பூரம்,
நவராத்திரி,
கிருத்திகை,
முத்துக்குமாசுவாமிக்கு தைமாதம் செவ்வாய்கிழமை ஆரம்பித்து 10 நாள் விழா நடக்கும்.
பங்குனியில் கோயிலின் பிரமோற்ஸவம் 28 நாள் பெருவிழா.
தல சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
பார்த்தால் அசரவைக்ககூடிய பிரம்மாண்டமான கோவில்.
தலத்தில் உறைகின்ற சிவனாருக்கு, வைத்தியநாதர் என்று பெயர். நோயால் அவதிப்பட்டு, தன்னிடம் அடைக்கலமாக வரும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர் ஆவார் !
இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன.
இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது.
மூலவருக்கு முன் தங்கம், வெள்ளியால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளன.
பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை. மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது.
அங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த ஸ்தலம்.
மகாலட்சுமிக்கு சன்னதி உள்ளது.
முருகப்பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம்.
செல்வ முத்துக் குமாரராக இத்தலத்தில் முருகன் தன் தகப்பனாரைப் பூஜிக்கிறார்.
செவ்வாய்க் கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்வார்.
இராமர் வழிபட்டு அருள் நலமுற்ற தலம்.
இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
இங்கு மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.
1. கற்பக விநாயகர். இவரை வழிபட்டால் என்ன வரம் கேட்டாலும் தருவார்.
2. செவ்வாய் தோசம் உள்ளவர்கள் அங்காரகனை வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப் பெறுவர் .
3. வைத்தியநாதசுவாமி சர்வ ரோக நிவாரணி.இவரை வணங்கினால் தீராத பிணிகள் எல்லாம் தீரும்.
4. செல்வ முத்துக் குமரர் என்ற முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பாக்கியம் தொழில் விருத்தி கிடைக்கும்.
5.தையல் நாயகி அம்பாளை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோசம் என்ற குறை நீங்கும்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 16 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.
பூஜை விவரம் :
ஆறு கால பூஜை, அர்த்தசாம பூஜையின் போது செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதனைப் புனுகு காப்பு தரிசனம் என்பர்.
பொது தகவல்:
இத்தல இறைவனை வணங்குவோர் அங்காரக தோஷம் நீங்கப்பெறுவர்.
இத்தலத் தீர்த்தமான சித்தாமிர்தகுளம் நோய் நீக்கும் ஆற்றல் உடையது.
நேத்திரப்பிடி சந்தனம், திருச்சாந்துருண்டை பிரசாதம் தருகிறார்கள். இதனை உண்பதால் எல்லாவிதமான நோய்களும் நீங்கும்.
பிறவிப்பிணி வைத்தியராகிய வைத்தியநாதப் பெருமான், தையல் நாயகி திருக்கரத்தில் தைலபாத்திரமும், அமிர்தசஞ்சீவியும், வில்வத்தடி மண்ணும் எடுத்துக்கொண்டு உடன் 4448 வியாதிகளையும் தீர்க்கின்ற இடம்.
இத்தலம் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்டது.
கோயிலின் கிழக்கே பைரவர், மேற்கே வீரபத்திரர், தெற்கே விநாயகர், வடக்கே காளி ஆகியோர் இத்தலத்திற்கு காவல் புரிகின்றனர்.
5 பிரகாரங்களைக் கொண்ட இந்தக் கோயில் மேற்கு திசை நோக்கியது. ஏழுநிலை ராஜகோபுரம் உள்ளது.
வைத்தியநாதர் தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு பல மாநிலத்து பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர்.
பிரார்த்தனை:
உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர்.
செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் அர்த்தசாமபூஜையில் முருகனின் திருவடிகளில் சாத்தப்பெறும் நேத்திரப்படி சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது. இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை வரம், தோச நிவர்த்தி ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
இவரது சன்னதியில் தரப்படும் வைத்தியநாதர் மருந்தை வாங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய்கள் பல தீருவதாக கூறுகிறார்கள். செவ்வாய் தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
நேர்த்திக்கடன்:
தையல் நாயகிக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.
சுவாமிக்கு மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர்,இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மொட்டை போடுதல், காது குத்துதல், வயிற்று வலி குணமாக மாவிளக்கு போடுதல், தாலி காணிக்கை, உருவங்கள் காணிக்கை ஆகியவற்றை செய்கின்றனர். அம்பாள் சன்னதியில் உப்பு, மிளகு , கடுகு, வெள்ளி கண்ணுருக்கள் ஆகியவற்றையும் பக்தர்கள் செலுத்துகிறார்கள்.
மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.
தலபெருமை:
காவிரி ஆற்றின் வடகரைப் பகுதியில் இருக்கும் சைவத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்று திருப்புள்ளிருக்கு வேளூர். அதன் இன்றையப் பெயர் வைத்தீஸ்வரன் கோவில்.
தினமும் அர்த்த ஜாமத்தில் முருகனுக்கு முத்துகுமார சுவாமிகளுக்கு தீபாராதனை நடக்கும். புனுகு, பச்சை கற்பூரம், சந்தனம், எலுமிச்சை சாத்தி பன்னீர் புஷ்பம், பால் அன்னம், பால் நைவேத்தியம் இரவு 9 மணிக்கு விசேசமாக பூஜை நடத்தி வழிபடுகின்றனர்.
சித்தாமிர்த தீர்த்தம்:
இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் குணமாகும் என்பது நம்பிக்கை. இதில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன. சதானந்த முனிவர் இங்குள்ள தீர்த்த கரையில் தவம் இருந்த போது, தவளையை பாம்பு விழுங்க முயற்சித்து, இவரது தவத்திற்கு இடையூறு செய்தது. கோபத்தில் இவர் விடுத்த சாபத்தினால் இந்த தீர்த்தத்தில் பாம்பு, தவளை இருப்பதில்லை.
புள்ளிருக்கு வேளூர்:
வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு.புள் - சடாயு என்ற பறவையும், இருக்கு - இருக்கு என்ற வேதமும் வேள் - முருகப்பெருமானும், ஊர் - சூரியனும் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற காரணத்தால் இத்தலப்பெயர் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் வந்தது.
நோய் தீர்க்கும் திருச்சாந்து:🅱
இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு "திருச்சாந்து' எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.
தோல் நோய்களுக்கு, இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர். வைத்தியநாதர் தன்னை வணங்கும் மக்களின் சாதாரண வியாதிகளை மட்டுமின்றி, பிறவிப்பிணியையே தீர்த்து விடுபவர்.
கோயிலின் கிழக்கேயுள்ள நுழைவிடத்தில், ஆதிவைத்தியநாதர் அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த சிவன் சன்னதியை தரிசித்தால், அது ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளை தரிசித்த பலனைத்தரும் என்பது ஐதீகம். வைத்தியநாதரும் மேற்கு நோக்கி உள்ளார்.
அங்காரகன்:
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வையை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார். கிரஹ பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்.
செவ்வாய் தோஷ நிவர்த்தி:
இந்தக் கோயிலிலுள்ள அங்காரகன் சன்னதியில் செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை மற்றும் பல சிரமங்களை அனுபவிப்போருக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் திசை 7 வருடம் நடக்கும். நிலம் வாங்க, கடன் தொல்லை நீங்க, மூட்டு வலி குணமாக இவரை வணங்குவது சிறப்பு.
செவ்வாய் தோஷம் நீங்க, முருகன் வழிபாடு, கார்த்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது, துவரை, செப்பு பாத்திரம் ஆகிய பொருள்கள் தானம் செய்வது, அங்காரகனுக்கு அபிஷேகம் செய்து சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது.
சடாயுகுண்டம்:
இத்தலத்தில் சம்பாதி சடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். சடாயுவின் வேண்டுகோளின்படி இராமபிரான் இத்தலத்தில் (விபூதி குண்டத்தில்) சிதையடுக்கிச் சாடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் சடாயு குண்டம் எனப்பட்டது. வீரசேனன் என்ற அரசன் சயரோத்தினால் பீடிக்கப்பெற்ற சித்திர சேனன் என்ற தன் மகனுடன் இத்தலத்திற்கு வந்து நீராடி இக்குண்டத்திற்கு அதிரசம் வடை முதலியன நிவேதனம் செய்து வேதிகையையும் பொன்னால் திருப்பணி செய்து குண்டத்திலுள்ள நீற்றை அள்ளி எடுத்துத் தானும் அணிந்து தன் புதல்வனுக்கும் அணிவித்து நோய் நீங்கப்பெற்று நலமுற்றான்.
செல்வ முத்துக்குமாரர்:
வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையாதலால், இங்குள்ள முருகன் "செல்வ முத்துக்குமாரர்' என அழைக்கப்படுகிறார். சூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார். செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் தினமும் நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது புனுகு, பச்சைக்கற்பூரம், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம், பால் சாதம், பால் ஆகியவற்றுடன் விசேஷ பூஜை செய்யப்படும்.
முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான். தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும்.
தல வரலாறு:
நவக்கிரங்களில் ஒருவரான அங்காரகன் வெண் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டார். நோய் தீர சிவனைச் சரணடைந்தார். சிவன் அசரீரியாக பூலோகத்திலுள்ள சித்தாமிர்த குளத்தில் நீராடி வழிபட்டால் குணமடையும் என்றார். அந்தக் குளம் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்ததை அறிந்த அங்காரகன் அங்கு வந்து நீராடி சிவனை வணங்கினார். சிவன் அவருக்கு திருச்சாந்து என்னும் மருந்து கொடுத்து குணமடையச் செய்தார்.
சிவன் அங்காரகனுக்காக மருந்து தயாரித்தபோது அம்பாள் தைல பாத்திரம் அமிர்த சஞ்சீவி வில்வத்தடி மண் ஆகியவை ஏந்தி நின்றாள். இதனால் தைல நாயகி எனப் பெயர் பெற்றாள். இது மருவி தையல் நாயகி ஆனது.
திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதியுற்றபொழுது அவர் தமக்கையார் வைத்தியநாதனை நினைந்து பிணிநீக்க தொழுதிட்டார், அவ்வாறே எழுந்தருளி பிணிநீக்கினார். அன்று முதல் இத்தல சிவனாரை அவரின் பக்தகோடிகளால் வைத்தியநாதன் என்றழைக்கபெற்று வழிபடலாயினர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இத்தலம்.
நோயால் அவதிப்பட்டு, தன்னிடம் அடைக்கலமாக வரும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர் , நம்பிக்கையுடன் சிவனை பார்த்து, மனம் உருகப் பிரார்த்தனை செய்தால் போதும். நோய்கள் ஓடிவிடும்.
தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம்
இருப்பிடம்:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து (18கி.மீ) சீர்காழி செல்லும் வழியில் வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.